Saturday, November 7, 2009

THIRUKKURAL

வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு (595)

சாதி, மதம், இனம், மொழி நாடு என்ற எல்லைகளைத் தாண்டி அனைத்து நாடுகளில் உள்ளவர்களுக்கும் அனைத்து மொழியினருக்கும் உரிய பொதுவான உயர்ந்த அறக்கருத்ததுகளைக் கூறும் நூல் திருக்குறள் ஆகும். எக்காலத்துக்கும் ஏற்ற கருத்துகளையும் திருக்குறள் முன் வைக்கிறது. காலம் கடந்து, மொழி, இனம், நாடு, சாதி, மதம் கடந்து உலகளாவிய நிலையில் மனித குலத்திற்கு வழிகாட்டும் வள்ளுவம் உலகப் பொதுமறையாகும். வாழ்வுக்கு இலக்கணமாகவும் மொழிக்கு இலக்கியமாகவும் உள்ள இந்நூலை எல்லா நாட்டவரும் எல்லா மொழியினரும் தத்தம் மொழியில் மொழிபெயர்த்துக் கொண்டுள்ளனர்.

தமிழ் நாட்டில் தமிழ் மொழியில் தோன்றிய இந்நூலை முதற்கண் தமிழர்களும் அடுத்ததாக இந்தியத் தேசிய நடுவண் அரசும் இதனை உலகுக்கு முறையாக அறிவிக்கக் கடமைப்பட்டவர்கள். இந்திய அரசு திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சட்டசபையும் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது. நல்லறிஞர்களும் பொது நிலையாளர்களும் இதனை வெகு ஆண்டுகளாகக் கோரி வருகின்றனர். எனவே நடுவன் அரசு திருக்குறளைத் தேசிய நூலாக ஏற்று அறிவிப்பு செய்ய வேண்டும்.

Thursday, November 5, 2009

ஒரே உலகம்



"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பாடலை
உலகமெல்லாம் பரப்பிய தவத்திரு தனிநாயக அடிகளார்
---------------



"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Death's no new thing; nor do our bosoms thrill
When Joyous life seems like a luscious draught.
When grieved, we patient suffer; for, we deem
This much - praised life of ours a fragile raft
Borne down the waters of some mountain stream
That o'er huge boulders roaring seeks the plain
Tho' storms with lightnings' flash from darken'd skies
Descend, the raft goes on as fates ordain.
Thus have we seen in visions of the wise ! -
We marvel not at greatness of the great;
Still less despise we men of low estate."
English Translation by Rev. G.U.Pope
in Tamil Heroic Poems

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

192, எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய
புறநானூறு - பாடியவர்: கணியன் பூங்குன்றன்

Sunday, November 1, 2009

வங்காலை

வங்காலைப் படுகொலை பற்றி தாயகக் கவிஞர் புதுவையின் வெளிப்பாடு:



ஏதுமறியாத எம் பிள்ளைகளை அமுக்கி

நித்திரையிற் கொல்.



நிலத்திற் காலுரசத் தூக்கிலிடு.

உரித்துச் சதையாக்கிப் பங்கிடு.

உறிஞ்சிய இரத்தம் கலந்து கறியாக்கி

எச்சமின்றி சுவைத்துச் சாப்பிட்டு ஏப்பமிடு.



பின்னர் பிள்ளைகளின் தாயைப்பிடி.

அவள் கணவன் முன்னே கவுணைத்தூக்கி

பிணத்தைப் புணருதலுக்கு ஒப்பாக

வெறி தீரும் வரையும் முயங்கு.

முடிந்ததும் பாதியுயிர் போயிருக்கும்

மீதியையும் வெளியேற்றி வீசிப்போ.



கணவனை மட்டும் ஏன் விடவேண்டும்?

பிடித்து மடக்கி முறி.

வதையின் வலியோலம் வெளியேறாதவாறு

சோறளித்த உளியாலேயே

தோண்டிசுவரோரம் எறிந்து செல்.



ஏனென்று கேட்கமுடியுமா உன்னையெவரும்?

உன் கனத்த சப்பாத்தின்

கீழே கசங்குவது தானேஎம் அடிமை ஜீவிதம்?





நேற்று நிலவெறித்த இரவில்

உன்னைப் பிடித்துலக்கிய உடற்பசி வடிந்திருக்கும்.

எங்கள் நெஞ்சில் கொதிப்புறும் நெருப்புக்குவடிகால் ஏது?





வெசாக் நாளில் மாடுரித்த ஒருவனுக்கு

பத்தாண்டு ஒறுப்பளித்த பௌத்த பூமியே!

என்ன தீர்ப்பு வழங்குவாய் இதற்கு?



நாளை நாடாளுமன்றம் கூடும்போது

கண்டனத் தீர்மானம் கொண்டு வருவர் சிலர்.

செங்கோலேந்திய சேவகன் முன்னேவர

சபாநாயகர் சபைக்கு வருவர்

வங்காலைக்கு மட்டும் பதில் வரமாட்டாது.





பனிஉறையும் தேசத்து குளிர் மலைச்சாரலுக்கு

பேசலாம் வருகவென அழைத்துச் சென்றவர்களுக்கும்

வங்காலையின் வலிக்குரல் கேட்டிருக்காது.





தங்கள் கதவுகளைச் சாத்தி

காற்றின் வழிகளை அடைக்கும் ஒன்றியமும்

இந்த உயிர் வதையைக் கணக்கிலெடுக்கப்

போவதில்லை.

எங்களை என்ன செய்யச் சொல்லுகின்றனர்

எல்லோரும்?



கண்காணிக்க வந்துள்ள

முன்னைய களமுனை அதிகாரிகளே!





பிணத்தின் முன்னே தொப்பி கழற்றவும்

மணக்கும் பிணக்குழி தோண்டி எடுக்கவும்

காய்ந்து கிடக்கும் கசங்கிய மலர்களை

கணக்கிலெடுக்கவும் தானா

நீங்கள் இங்கே காத்திருப்பது?



கதிர்காம அழகி “மன்னம்பெரி”யை

தென்னிலங்கைப் பேய்கள் குதறியபோது

எதிர்ப்புக்குரல் முதலில்

எங்களிடம் இருந்துதான் வந்தது.





“சூரியகந்த” புதைகுழிகளை

தோண்டியெடுத்து விசாரணையை தொடக்கு என்று

முதற்குரல் இங்கிருந்துதான் எழுந்தது.





மனிதம் சாகாது கொஞ்சமாயினும் எஞ்சியிருக்கும்

சிங்களத் தோழர்களே!

தோழியரே!

பதிலுக்கு எதிர்பார்க்கின்றோம் உங்களிடமிருந்து

ஒரு பதிலை.



தொடரும் எல்லாக் குற்றங்களுக்கும்

இங்கொரு சித்திரபுத்திரன் கணக்கெழுதுகிறான்.



எழுதும் குறிப்பேடு நிறைந்து வழிகிறது

குற்றங்களாக வங்காலை வரை.

நாளை கைகட்டிக்கொண்டு

தரும சபையிற் தலைகுனிந்து நிற்பீர்

வழங்கும் தண்டனைகளுக்காக.



ஒன்று மட்டும் உறுதி

தீர்ப்பெழுதும் கணம் வரை

உம்மைத் திருத்தவே முடியாது.



- தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை-



நன்றி: ஒருபேப்பர்



அன்புடன்

சிறீதரன்

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers