Wednesday, February 3, 2010

காவேரி


*"நடந்தாய் வாழி காவேரி !"*
அழிப்பேன் உன்னை காவேரி ! இன்றைய அரசியல் மணல் கொள்ளையர்களின் கொள்கை !
*காவிரித்தாயை வாழ்த்தி வணங்கினர் நம் முன்னோர் ! ஆனால் நாமோ வெளிப்பகையால்,
கருநாடகத்தால் நீரை இழந்தோம் ! கருநாடகத்தின் வெள்ளத்தின் வடிகாலன்றோ காவேரி!

ஆனால் இன்றோ இரக்கமற்ற ஊழல் அரசியல் வாதிகளின் கூட்டுடன் மணல்
கொள்ளையர்களால் காவேரி ஆறு அழிவதை சும்மா வேடிக்கைப்
பார்த்துக்கொண்டிருக்கிறோம் !

பல ஆண்டுகள் சென்று தொட்டியம் முசிறி வழியாக சமீபத்தில் பயணம் செய்தேன். முசிறி
குளித்தலை பாலத்துக்கு மேற்கே 2 கி. மி. தொலைவில் பாதாள காவேரியைக் கண்டு
அதிர்ந்தே விட்டேன்! நெய்வேலி நிலக்கரி வெட்ட பறிக்கும் பள்ளத்துடன் காவேரியின்
பாதாளப் பள்ளம் சற்றும் குறைவானது அல்ல ! தஞ்சைத் தரணியை சேர்ந்த நான் என்
கண்ணீரை அடக்கமுடியாமல் வயிறு பற்றி எரிய அந்த கோரக் கட்சியைக் கண்டு துவண்டேன்
.
*காவேரி ஆற்றில் பட்டப் பகலில் நூற்றுக் கணக்கான லாரிகள் வரிசை கட்டி நிற்க உயர் நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட கன ரக மண் அள்ளும் எந்திரம் (Heavy Earth Movers ) 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டுள்ளது.
ஒரு நாளைக்கு 2500 லாரிகள் மணலைக் கடத்துவதாகவும் ஆனால் 1000 லாரிகள் கணக்குக் காட்டப்படுவதாகவும் ஒரு நாளில் அரசுக்கு ஐம்பது லட்சம் ரூபாய்கள் நட்டம் என்றும் தொட்டியம்
காங்கிரசு MLA ., M . ராஜேந்திரன் ( பார்க்க 3 .1 .10 தேதி** பக்கம் 4 , Times
of India நாளிதழில் ) கூறுகிறார்.*

அரசு வருமானத்தை இழக்கிறது என்றாவது கவலைப்பட ஒரு MLA தொட்டியம் ராஜேந்திரன்
(காங்கிரசு) இருக்கிறாரே !

அ தி மு க MLA ம.சின்னசாமி கூறுவதோ , காவேரி மணல் கேரளாவுக்கு மற்றும் கோவை, நாமக்கல் , திண்டுக்கல் மாவட்டங்களில் கொள்ளை விலைக்கு விற்கப்படுகிறது.
கரூர் கொள்ளைக்காரன் காவேரி மட்டுமல்லாது அமராவதியிலும் மணலை கொள்ளையடித்து 3 யூனிட்
ரூ.15000 என்று கேரளாவில் "காவேரி மணல் கிடைக்கும்" என பெயர்ப்பலகை போட்டு விற்கிறான் .

கடலில் வீணாகும் தண்ணீரைத் தர மறுக்கும் கேரளத்துக்கு காவேரி மணலைக் கடத்தி
விற்று தமிழகத்தை பாலைவனமாக்கும் துரோகத் தமிழனைத் தூக்கில் போட வேண்டாமா ?

அரசு வருமானத்தை இழப்பது என்பது ஊழலின் ஊற்றுக்கண் ! அதுவல்ல பிரச்சினை! ஊழல் இன்றைய அரசியலின் வழ்வாதாரமன்றோ !

காவேரி முசிறி தாண்டாது ! தஞ்சை அழிவது நிச்சயம்! தஞ்சை விவசாயிகள் தற்கொலை செய்து சாகவேண்டியது தான் ! நிலத்தடி நீர் வற்றி காவேரி பாயும் இடங்கள் பாலைவனமாகாதா ?

கருநாடகத்திடம் காவேரி நீர் கேட்க இந்த கொள்ளை அரசியல் வாதிகளுக்கு யோக்கியதை இல்லை.

தமிழகத்தின் சக்திவாய்ந்த அரசியல் புள்ளிகளால் பாலாறு, காவேரி, வைகை, தாமிரபரணி படுகைகளில் மணல் கொள்ளை ஓகோவென நடப்பதாகவும் மதுரை, திருச்சி, சென்னை என மூன்று பகுதிகளாக பிரித்து ஆட்சி அதிகாரத்துக்கு நெருக்கமான மூன்று கொள்ளையர்கள் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக தமிழ் நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் S .யுவராஜ் கூறுகிறார்.

Mines and Minerals (Development & Regulations) Act முற்றிலுமாக ஒவ்வொரு சட்டப் பிரிவுகளும் மீறப்படுகிறது.

சென்னை உயர் நீதி மன்ற ஆணைகளும் காற்றிலே பறக்கிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் போன்ற இடங்களில் மட்டும் மக்கள் எதிர்த்து போராடுகிறார்கள். திருச்சி, மதுரை மன்னர்கள் பகுதியில் நீதி மன்றத்தை நாடும் துணிவு மக்களுக்கில்லை.


ஆனால் இன்று 3 - 01 -2010 Times Of India நாளிதழில் விரிவாக தமிழக ஆறுகளில் கேள்விமுறையற்ற மணல் கொள்ளை பற்றி வந்த செய்தி சிறிது நம்பிக்கை அளிக்கிறது. எதையே பொதுநல வழக்காக நடத்தி உயர் நீதி மன்றமோ , உச்சநீதி மன்றமோ ஆணையிட்டு தமிழகத்தின் எதிகாலத்தை வரும் சந்ததிகளுக்கு காக்க பணிவுடன் வேண்டுகிறேன்.

கோவிந்தக் கண்ணன்

No comments:

Post a Comment

தங்கள் கருதுக்களை இன்கே பதியுங்கள்:

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers