Thursday, December 9, 2010

கல்வியும் மரக்கன்றும்

                           தெம்மாவூரில் சிங்கப்பூர் தெம்மாங்கு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையிலிருந்து உள்ளே 10 கல் தொலைவில் படு மோசமான சாலையில் இருக்கிறது தெம்மாவூர் என்கிற சிற்றூர். அந்த ஊரையும் தாண்டி வீடுகள் குடிசைகள் எதுவுமே கண்ணில் படாத இட்த்தில் ஐந்துஆறு இளைஞர்கள் சிறு மேடை அமைத்துக் கொண்டிருந்தனர். ஒரு வண்டியில் பெண்கள் வந்து இறங்கினர். வேலை செய்து கொண்டிருந்த இளைஞர்கள் கைகளில் சிறு இலையைக் கொடுத்து அதில் தயிர்சோறு அளித்தனர். அடுத்து வந்த வண்டியில் ரெட்டிப்பாளையம்  இசைக் கலைஞர்கள் 
சோறெல்லாம் வேண்டாம்மா என்று கூறிவிட்டு நெருப்பை மூட்டிப் பறைகளுக்குச் சூடேற்றினர். பறை ஒலிக்கு ஏற்ப அவர்கள் ஆடத்தொடங்கினர்.  தாரை, தப்பு, மேளம் 

என்று அவர்கள் அடித்த அடியில் சுற்று வட்டாரமே அதிர்ந்தது.





சிறிது நேரத்தில் அந்த மிகச்சிறிய சாலையில் ஒரு பேருந்து வந்து நின்றது. அதிலிருந்து  சீன மாணவர்கள் கிடுகிடுவென இறங்கி ஒடோடி வந்தனர். அடுத்து மலாய் மாணவர்கள் சிலர் வந்தனர். கடைசியாகத் தமிழ் மாணவர்கள் சிலர் வந்தனர். மொத்தம் இருபது பேர் இருக்கும்,  ஆட்டம்போடத் தொடங்கினர். ஆனால் ரெட்டிப்  பாளையம் குழுவினரின் ஆட்டத்தைப் பார்த்து வியந்து நின்றுவிட்டனர். சிறிது நேரத்தில் விழா தொடங்கியது.
      அறக்கட்டளையின்  செயலர் முனைவர் பா.இறையரசன் தலைமை ஏற்று எழுத்தேணி அறக்கட்டளை பற்றி விளக்கினார். பள்ளி, மாணவரில்லம் ஆகியவற்றுடன் இயற்கைஉழவு சார்ந்த விளைநிலம் என்னும் திட்டத்தில் இன்று மரக்கன்று நடும் விழா இங்கே நடைபெறுகிறது என்றும்,ம்முடைய மாணவர் சகாயராசு சிங்கப்பூர் ஃபூச்சூன் பள்ளியில் தமிழாசிரியர் ஆகி, இன்றைக்கு 20 மாணவர்களுடன் சுற்றுலா வந்துள்ளார்  என்றும் அவர் கூறியதும்தான் வந்துள்ள சீன மலாய், தமிழ் மாணவர்கள் சுற்றுலா வந்தவர்கள் என்று தெரிந்தது.

அறக்கட்டளையின் நிறுவனர் சகாயராசு வரவேற்றார். மாணவர்களிடமிருந்தோ, பெற்றோர்களிடமிருந்தோ, பொதுமக்களிடமிருந்தோ நன்கொடையோ கல்விக்கட்டணமோ பெறாமல் இலவயக்கல்வி தர, பள்ளி, விடுதி ஆகியவற்றுடன் அமைந்த விளைநிலத்தில் இயற்கை உழவு மேற்கொள்ளப்பெறும்; முதலில் ஆழிப்பேரலை (சுனாமி) முதலிய இயற்கை ஏதங்களால் உறவிழந்த (அனாதை) குழந்தைகள், தாழ்த்தப்பெற்ற ஊனமுற்ற ஏழை மாணவர்கள் சேர்க்கப்பெறுவர் என்று சகாயராசு கூறினார்.

              சென்னையிலிருந்து வந்திருந்த வரலாற்றறிஞர் கோ.கண்ணன் (முன்னாள் பாரத வங்கி அதிகாரி) தமிழகத்துக்கும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே உள்ள வரலாற்றுத் தொடர்பைச் சீனப்பயணிகள் பதிவு செய்துள்ளனர்; சுற்றுலா வந்துள்ள சீன, மலாய், சிங்கபுர மாணவர்களை வரவேற்கிறேன் என்றார்.
சென்னை மண்டலக் கல்லூரிக் கல்வித்துறையின் துணை இயக்குநர் திரு அ. மதிவாணன் சீன மலாய் மாணவர்களுக்காக ஆங்கிலத்தில் பேசினார். கல்வி, வரலாறு, இலக்கியம் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்று நினைக்கும் சகாயராசை விட அவரது பெற்றோரைப் பாரட்டவேண்டும் என்று கூறி அவரது தந்தையார் திரு டேவிட் அவர்கள் கையை உயர்த்தி, அனைவரையும் கைதட்டிப் பாராட்டச் செய்தார்.  “தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்”  ஆகவும் “அவையத்து முந்தியிருப்பச்” செய்த தந்தையாகவும் நெகிழ்ந்தார் டேவிட். அவருக்கு ஃபூச்சூன் பள்ளி சார்பில் அப்பள்ளியின் ஆசிரியர் திரு வே. பச்சைப்பெருமாள் நினைவுப்பரிசு வழங்கிச் சிறப்பு செய்தார். இசை விய ஆசிரியர் எஃசுடீ லிம் தமிழகப்பயணமும் இவ்விழாவும் மறக்கமுடியாதவை என்று கூறினார். மாணவன் தௌபீக்கும் மாணவி துரியாட்சிணியும் தங்கள் பயண அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
கல்விப் பயிர் வளர்க்கும் இம்முயற்சிக்குத் தொடக்கத்தில் இருந்தே ஒத்துழைப்பு நல்கி வரும் இயற்கை உழவியல் இயக்க இளைஞர்கள் ஆனந்தராசும் பிரசன்னாவும்  மரக்கன்றுகளைக் கொண்டு வந்திருந்தனர். பள்ளிக்கட்டடம் கட்டவுள்ள நிலத்தின் நான்கெல்லையிலும் வந்திருந்த மாணவர்களும் விருந்தினர்களும் மரக்கன்றுகளை நட்டனர்.அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினராகிய தங்கமணி ஆவார்.
வண்டியில் வந்து தயிர்சோறு அளித்த அந்த பெண்கள் மறுபடியும் வண்டியில் ஏதோ கொண்டு வந்தனர்; எல்லோருக்கும் அவர்கள் நெல்லிக்கனியும், சுக்குத்தண்ணியும் (காப்பியும்) கொடுத்தனர். கொடுத்தவர்கள் வேறு யாருமில்லை சகாயராசு என்னும் அந்த ஆசிரியரின்அக்கா, தங்கைகள்தான். வண்டியை ஓட்டிவந்தவர்கள் அவரது தங்கை கணவரும் தம்பிகளும்தான். குடும்பம் ஒரு கோயில் என்பார்கள். சகாயராசு குடும்பத்தினர் அனைவரும் ஒரு தென்னந்தோப்பாக இருந்து உலகத்தரமுடைய இலவயக்கல்வி, மாணவர் இல்லம், இயற்கைஉழவியல் உணவு உற்பத்தி ஆகிய ஆலமரத்தோப்புக்கு மரக்கன்று விழா நடத்தியுள்ளனர்.




விரைவில் செயற்கை உரமோ பூச்சிமருந்துகளோ இடாமல்  காய்கறிகளும் தானியங்களும், மூலிகைகளும் இங்கே விளையும்;  நல்ல கல்வி பெற்ற மாணவச்செல்வங்களும் தோன்றுவார்கள்.
                                         -செய்தியாளர்: அ.வள்ளி. 




Sunday, December 5, 2010

கிரந்த எழுத்துத் திணிப்புக்கு எதிர்ப்பு

natpu
டந்த நவ.3ஆம் நாள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சிவ இளங்கோ இல்லத்தில் தமிழ்க்காப்புக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்க்காப்புக் கழகம், தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம், தமிழர் சுற்றம், தமிழ் எழுச்சிப் பேரவை, இலக்குவனார் இலக்கிய இணையம், புரட்சிக்கவிஞர் பேரவை, தமிழ்ப்பண்பாட்டுச் சங்கம், மாநிலத் தமிழ்ச் சங்கம், தமிழர் களம் ஆகிய அமைப்புகளின் சார்பில் தமிழ்க்காப்புக் கூட்டம் நடைபெற்றது.
பேராசிரியர் பா.இறையரசன் தலைமை தாங்கினார். அன்றில் பா.இறையெழிலன் வரவேற்புரையாற்றினார். தொடக்கத்தில் கலைக்கடல் ஆத்மநாதன் தமிழ் வாழ்த்துப் பாக்களைப் பாட கூட்ட ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் தொடக்கவுரையாற்றினார். முனைவர் க.ப.அறவாணன் நிறைவுரையாற்றினார். த.தே.பொ.தலைவர் பெ.மணியரசன், அண்ணாநகர் தமிழ்ச்சங்கச் செயலர் நாகசுந்தரம் ஆகியோர் தீர்மானங்கள் தொடர்பில் உரையாற்றினர். மேலும், முன்னாள் மாநகரத் தலைவர் சா.கணேசன் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், பாவலர் இராமச்சந்திரன், பொறி.இ.திருவேலன், வா.மு.சே.திருவள்ளுவர், செம்மல், முனைவர் மு.கருணாநிதி, தென்னன் மெய்ம்மன்,  பொறி. அருட் கண்ணனார், மா.பூங்குன்றன், அரணமுறுவல், வெற்றிச் செழியன் எனப்  பலரும்  தீர்மானங்களை வழி மொழிந்தனர்.
கூட்டத்தில்பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
1. தமிழக அரசு எழுத்துச் சிதைவு முயற்சிகளை எந்த வகையிலும் ஊக்கப்படுத்தாது என்பதையும் தமிழ் எழுத்துக் காப்பே அரசின் நோக்கம் என்பதையும் தமிழக முதல்வர் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.
2. உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிராகத் தமிழ் எழுத்துப் பாதுகாப்பை வலியுறுத்திய பேராளர்கள் பேராசிரியர் செ.இரா.செல்வகுமார்,  பேராசிரியர் மணியம், பொறி.நாக. இளங்கோவன், இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோரின் ஆய்வுரைகளை இணையதளத்தில் ஒளிபரப்ப வேண்டும். இவற்றை ஒளிபரப்பாமல் இருட்டடிப்புச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. இப்பேராளர்களிடம் ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று ஆய்வு மலரில்  இடம்பெறச் செய்ய வேண்டும். ஆய்வு மலரில் இவர்களின் தமிழ்க்காப்பு ஆய்வுரைகள்  இடம் பெறுவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
natpu
4. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றத்தைத் தடுத்து இதே பெயரிலேயே பல்கலைக்கழக நிலையில் செயல்பட ஆவன செய்ய வேண்டும்.
5. அரசின் கொள்கைக்கு எதிராக இதன் இணையதளத்தில் இடம் பெற்றுள்ள எழுத்துச்சிதைவு தொடர்பான எழுத்துச் சீரமைப்பு ஒலி-ஒளிக்காட்சிப் படங்களை அகற்ற வேண்டும். அரசின் கொள்கைக்கு மாறாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி  இதனை இடம்பெறச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. இந்தியப் பணமதிப்பைக் குறிக்க தேவநாகரி அல்லது இந்தி எழுத்து வடிவத்தைப் பின்பற்றாமல் வேறு குறியீட்டு வடிவம் பின்பற்றப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வந்திருக்கும் குறிப்படங்களை வெளியிடச் செய்து மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் எழுத்தில்லா வேறு வடிவத்தைத் தேர்ந்தெடுக்கச் செய்ய வேண்டும்.
7. அறிவிக்கப்பட்ட செம்மொழித்தமிழ் விருதாளர்களுக்கான விருதுகளை உடனடியாக மேதகு குடியரசுத்தலைவர் மூலம் வழங்க வேண்டும்.
8. குறள்பீட விருதும் தொல்காப்பியர் விருதும் ஒவ்வோர் ஆண்டிற்குத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுபட்டுப் போன ஆண்டுகளுக்கும் இவ் விருதுகள் வழங்கப்படவேண்டும்.
9. உள்நாட்டு அறிஞருக்கான குறள்பீட விருது அறிவிக்கப்படவில்லை. 2004-05 ஆண்டு முதல் இவ்விருதிற்குரிய அறிஞர்களை அறிவிக்க வேண்டும்.
natpu
10. சமசுகிருதம், அரபி, பெர்சியன், பாலி/பிராகிருதம் முதலான மொழிகளைச் சேர்ந்த மூத்த அறிஞர்களுக்கு விருதுத்தொகைகள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் உரூபாய் 50,000 வழங்கப்படுகின்றன. சமசுகிருதத்திற்குச் செம்மொழி ஏற்பிற்கு முன்பிருந்தே ஆண்டிற்கு 15 மூத்த அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, தமிழில் ஆண்டுதோறும் 25 செம்மொழித் தமிழ் அறிஞர்களுக்கு வாணாள் செம்மொழி விருதுகளை வழங்க வேண்டும்.
11. சமசுகிருத இதழ்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் விளம்பரங்கள் வழங்குவதன் மூலம் மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது.  இதேபோல் நல்ல தமிழில் வரும்  இதழ்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் கட்சி வேறுபாடு இன்றி அரசு விளம்பர உதவி வழங்க வேண்டும். மத்திய அரசின்  விளம்பர உதவிகள் இவற்றிற்குக் கிடைக்கவும் ஆவன செய்ய வேண்டும். கொச்சை வடிவிலும் கிரந்த எழுத்துகள் முதலான பிற மொழி எழுத்துகளைப் பயன்படுத்தியும் அயற்சொற்களைக் கலந்தும் வெளிவரும் இதழ்கள், செய்தித்தாள்களுக்கு விளம்பரம் அளித்து வருவதை அரசு உடனே நிறுத்த வேண்டும்.
12. நல்ல தமிழ்ப் பெயர்கள் தாங்கியும் கதைப் பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள் சூட்டியும் தமிழ், தமிழர் நலனில் கருத்து செலுத்தியும் வரும் திரைப்படங்களுக்கு மட்டுமே அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
13. இணைய மாநாட்டின் தொடர்ச்சியாகக் கணினியில் பயன்படுத்தப்படும் ஒருங்குறி எழுத்துருவில் கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. பிற சமசுகிருத ஒலிப்பு எழுத்துகளையும் கணினி எழுத்துருக்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். ஆங்கிலம் முதலான பிற மொழி எழுத்துகளை அடைப்பில் குறிக்க வேண்டிய தேவை வரும்பொழுது எவ்வாறு அந்தந்த மொழி எழுத்துருக்களில் இருந்து அவற்றைக் கணியச்சிடுகிறோமோ அதேபோல் இந்த எழுத்துகள் தேவையெனில் சமசுகிருத எழுத்துருக்களில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, தமிழ் எழுத்துரு என்பது தமிழர்கள் மட்டுமே இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
natpuவரவேற்புரையில் அன்றில் பா.இறையெழிலன், செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் வழியில் அவர் நிறுவிய தமிழ்க்காப்புக் கழகச் செயற்பாடுகளைப் பின்பற்றிச் செயல்படப் போவதாகக் குறிப்பிட்டார்.
தலைமையுரையில் பேராசிரியர் பா.இறையசரன் ஒருங்குறியில் தமிழ் இடம்பெறப் பல போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் சமசுகிருதம் எளிதில் தமிழைச் சிதைத்து நுழைய சதி செய்கிறது என்பது குறித்து விளக்கினார். எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிரான ஆய்வறிஞர்களின் கட்டுரைகளை உடனே  இணையதளத்திலும் கருத்தரங்க மலரிலும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் வேண்டினார்.
தொடக்கவுரையில் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம், மொழியைக் காப்போம், இனத்தைக் காப்போம் என்னும் கொள்கைகளின் அடிப்படையில் தமிழ்க்காப்பு அமைப்புகள் ஒன்றுகூடியுள்ளதைக் குறிப்பிட்டார்.  அனைத்துத் தீர்மானங்கள் குறித்தும் விளக்கிய இலக்குவனார் திருவள்ளுவன்  தமிழ்க்காப்பு அமைப்புகளின் சார்பாக ஆசிரியர் வீரமணி ஐயா அவர்கள் மூலமாக மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்ததற்கேற்ப அவர் 6.11.2010 அன்று  நடைபெற இருந்த ஒருங்குறிக் கூட்டத்தில் கிரந்த எழுத்தைப் புகுத்த முயலும் இந்திய அரசின் தீர்மானத்தை வல்லுநர் குழுவின் கருத்திற்கேற்ப முடிவெடுக்கும் வகையில் அடுத்த கூட்டத்திற்கு (பிப்.26.2011) ஒத்திவைத்ததற்கு  இருவருக்கும் நன்றி தெரிவித்தார். தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுத்துத் தமிழ் அழிப்பு முயற்சியைத் தடுக்க வேண்டும் என்றார். இராமையா அன்பழகனாகவும் நாராயணசாமி நெடுஞ்செழியனாகவும் சின்னராசு சிற்றரசாகவும் மாறித் தமிழ்ப்பெயர் சூட்டிய இயக்கத்தின் ஆட்சியில், தொல்.திருமாவளவன் தமிழ்ப்பெயர் சூட்டும் இயக்கத்தையே நடத்துகையில், பிறமொழிப் பெயர்களுக்குத் தமிழ் எனச் சொல்லி வரிவிலக்கு அளிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்றார்.

நிறைவுரையாற்றிய மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எப்போதும் முதல்வர் கலைஞர் துணை போகமாட்டார் என்றார். தமிழ்மானம், தமிழ்ப்பண்பாடு முதலானவை காப்பாற்றப்பட இணையத்தளம் வாயிலாகவும் வேறு வழியாகவும் தமிழை அழிக்கும் முயற்சிகளை அடியோடு எதிர்க்க வேண்டும் என்றார்.
பாவலர் மறத்தமிழ் வேந்தன் நன்றியுரை நவின்றார்.
நன்றி: நட்பூ இணைய இதழ்

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers