Wednesday, July 10, 2013

தமிழ் மகளின் துயர் துடைப்போம்!


இனிய உதயம்- ஜூன் மாத இதழில் வெளி வந்த என் கட்டுரை:

இனிய உதயம்

01-06-2013



           ண்களில் உப்புக் கண்ணீரும் நெஞ்சத்தில் இரத்தக் கண்ணீரும் வழிய இக்கட்டுரையை எழுதுகிறேன். செம்மொழியாம் தமிழ் மகளின் துயர்கண்டு கண்கள் ஆறாய்ப் பெருகுகின்றன. ஆரியப் படையெடுப்பு, உருது, அரபு, போர்ச்சுகீசு, ஆங்கில மொழியாளர்களின் படையெடுப்பு ஆகியவற்றாலும் மணிப்பிரவாள நடையாலும் சமஸ்கிருதக் கலப்பாலும் இந்தித் திணிப்பாலும் தமிழ்மொழியின் நலம் மாற்றாரால் சிதைந்தது. ஆனால் அதைவிடக் கொடுமை தமிழர்களால் நாளும் தமிழுக்குத் தமிழில் நேரும் குறைகள் மிகுதியாகி வருகின்றன. தமிழ் படிப்படியே மெல்ல மெல்ல தன் வளமும் வாழ்வும் குறைந்து வருகின்றது. இதைத் தடுக்க வேண்டாமா?

மேடை ஏறி வாய் கிழிய முழங்குகின்ற சில தமிழர்களைப் பார்த்ததும் சிரிப்புத்தான் வருகிறது. முழங்குகின்ற இந்த வாயர்கள் முழுங்குவது நிறைய! எழுவாய், பயனிலை, ஒருமை, பன்மை, ஒற்றுகள், சாரியை, சந்தி, சொற்கள் என பலவற்றை முழுங்கிவிடு கிறார்கள். "நிதி அமைச்சர் வரி கட்ட வேண்டும் என்றார்கல், உடனே சட்டசபையில் சிரித்தார்கல், இதை நான் ஆனித்தரமாகப் பதிவு செய்ய விரும்புகிறோம், மக்கல் கவனிப்பார்கல்' என்று தொலைக்காட்சி நேர்காணலில் எதிர்க்கட்சிப் பேச்சாளர் முழங்குகிறார். "என் தமிள் சமுதாயமே' "அரசாங்கத்துக்குச் சொள்வேன்', "கேட்டுக் கொல்கிறேன்'- என்று பேசும் இவர்கள் தமிழின் ஒலிகளை, எழுத்துகளைக் கொல்கிறார்கள்.

ஒலியும் ஒளியும்!

வானொலி தொலைக்காட்சிகளில் கேட்கவே வேண்டாம்.

"அரிவிக்கப்பட்டுல்லது', "கோரிக்கை வைத்துல் லார்கல்', "திறுமனம் ஆனதும் ஓரிறு குழந்தை மட்டுமே பெற்றுக்கொல்லவேண்டும்'. "சூறாவலி'- இப்படி நாள்தோறும் தமிழ்க் கொலை செய்யும் அறிவிப்பாளர்களையும் நடிகர்களையும் ஏற்றுக்கொண்ட தமிழனை என்ன சொல்வது? ""தமிழனுக்கு இரும்புக்காது'' என்றாரே பாரதியார். உண்மைதான்!

தெரியாத தமிழ்


"பாட்டன் தமிழை வீட்டிலாவது பேசுவோம்' என்று வெளிநாட்டுத் தமிழர்கள் தங்கள் வீடுகளில் எழுதிவைத்துக் கொண்டார்கள். இன்று தமிழ்நாட்டில் அதுவும் கெட்டது. தமிழ்மொழியை விட்டுவிட்டுப் பள்ளிகளில் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் என்று பிறமொழிகள் தமிழன் தமிழச்சி பெற்ற குழந்தைகளுக்குத் திணிக்கப்படுகின்றன.

"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே! - அதைத் தொழுது படித்திடடி பாப்பா!' என்றார் பாரதியார்.

ஆனால் தமிழர்களின் பிள்ளைகள் தமிழ்நாட்டில் தமிழ் தெரியாமலே வளர்கின்றனர். 

சிற்றூர்களில் உள்ள குழந்தைகளுக்குக்கூட தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லை; தமிழ் படிக்கத் தெரியாது. "குமுதம்', "விகடன்', "ராணி', "தினத்தந்தி', "மாலைமுரசு' என்று தமிழ் இதழ்களின் பெயர்களைப் படிக்கக்கூடத்தெரியாது. அதனால்தானோ என்னவோ "குமுதம்', "விகடன்' முதலிய இதழ்களில் ஆங்கிலச் சொற்றொடர்கள் ஆங்கில எழுத்துக்களில் இடம்பெறுகின்றன. இன்னும் சில காலத்தில் இவை இருமொழி (இண்ப்ண்ய்ஞ்ன்ஹப்) இதழ்கள் ஆகிப் பிறகு இந்தி கலந்த ஆங்கில இதழ்களாகி விடலாம். நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களால் மட்டுமே இந்தத் தமிழ் வார, நாள் இதழ்களைப் படிக்கமுடியும் என்ற நிலை உருவாகி வருகின்றது.

உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குடியேறிய- குறிப்பாக மொரீசியசு, சீசெல்சு, தென் ஆப்பிரிக்கா முதலிய பல நாடுகளில் உள்ள தமிழர்களின் வீட்டுக் குழந்தைகள் தமிழ் அறவே 
தெரியாமல், அறியாமல் வளர்கிறார்கள். அவர்களுக்குத் தமிழ்ப்பாடப் புத்தகங்கள் வேண்டும் என்று கேட்டபோது, இந்தி(ய) அரசு உடனே கப்பலில் ஏற்றி ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பிள்ளைகள் படிப்பதற்கு உரிய இந்திப் பாடப் புத்தகங்களை அனுப்பியது.

தமிழக அரசும் இந்திக்கு எதிர் என்று கூறி ஆங்கிலத்தை வளர்த்து வருகிற போக்கில் தமிழை மறந்துவருகிறது. மாநகராட்சி முதல் ஊராட்சி வரை ஆங்கில வழிப் பள்ளிகளை/வகுப்புகளைத் தொடங்கி வருகிறது. ஒரு கோடி ரூபாய்க்கு ஆங்கில அகராதி வாங்கித் தருகிறது. தமிழ் அகராதி ஒரு பள்ளியிலும் கிடையாது; பிள்ளைகளுக்கும் சரி, தமிழ் ஆசிரியர்களுக்கும் சரி பல அருஞ்சொற்களுக்குப் பொருள் தெரியாது.

தமிழ் தண்டம்


தமிழ் தவிர பிற படிக்கத் தகுதியற்றவர்களும், மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும் இளங்கலை (பி.ஏ.) தமிழ் படிக்கிறார்கள்; பிற பாடம் படித்தவர்களும் மலையாளிகளும் தெலுங்கர்களும் முதுகலை (எம்.ஏ) தமிழ் படிக்கிறார்கள்; இந்த ஆசிரியர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் தமிழ்ப்பாடத்தை நடத்துகிறார்கள். தனியார்பள்ளி நிருவாகங்கள் ஆங்கிலத்தில்தான் நடத்தவேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன. குழந்தைகள் நிலைமையும் தமிழ் அறவே தெரியாத நிலை என்பதால் "அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா' என்பதை ஆங்கிலத்தில் எழுதிவைத்துத்தான் படிக்கின்றன. தமிழை "டமில்' என்றுதான் சொல்லவேண்டும் என்பது இப்பள்ளிகளில் உள்ள சட்டம்; "தமிழ் டீச்சர்' என்றால் அடிவிழும், "டமில் டீச்சர்' என்றுதான் கூறவேண்டும்.

ஆங்கிலப் பள்ளிகளில் பள்ளி நேரத்தில் குழந்தைகள் தமிழில் பேசினால் தண்டனை. ஒரு பள்ளியில் குழந்தையின் கழுத்தில் "இனி தமிழில் பேச மாட்டேன்' என அட்டையில் எழுதி மாட்டிவிட்டனர்; 

சில பள்ளிகளில் "தண்டம்' கட்டவேண்டும். குழந்தைகள் வீட்டிலும் ஆங்கிலத்தில் பேசவேண்டும்; பெற்றவர்களும் மற்றவர்களும் குழந்தையுடன் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி வருகிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் வீட்டில் தமிழில் பேசும் பெற்றோர்களுக்குத் "தண்டம்' விதிக்கும் நிலை வரலாம்.

தமிங்கிலம்


இந்தியை எதிர்க்கும் தமிழர்களுக்கு இந்தி மட்டுமில்லை, ஆங்கிலமும் தெரியவில்லை தமிழும் தெரியவில்லை என்னும் நிலைமை. பள்ளிக்கூடப் பிள்ளைகளிடம் "வலது புறம்' "இடது புறம்' என்றால் தெரியாது. தமிழில் எண்கள் எழுதத் தெரியாது (பல தமிழாசிரியர்களுக்கும்கூட!). "பதினெட்டு' என்றால் தெரியாது, "எய்ட்டீன்' என்று ஆங்கிலத்தில் சொல்லவேண்டும். "நன்றி மறந்த தமிழர்கள்' என்று கமலஹாசன் கூறினார். ஆம், "நன்றி' என்று கூறமாட்டார்கள், "தேங்க்ஸ்' என்பார்கள். பேருந்து நிலையம், போக்குவரத்து, பொதுப்பணித்துறை, காவல்நிலையம், மாவட்டக் கருவூலம், மருத்துவமனை, திரையரங்கம் முதலிய பல நல்ல தமிழ்ச்சொற்கள் புழக்கத்திற்கு வர மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கமும் பின்வந்த திராவிட இயக்க ஆட்சியும் காரணம் ஆகும். ஆனாலும் "பேருந்து நிலையம் எங்கே இருக்கிறது.' என்று கேட்போமா?

""பேருந்தா, பருந்தா? போக்குவரத்து என்றால் போகவும் வரவும் சீட்டு பயன்படுமா?'' என்றெல்லாம் முதலமைச்சராக இருந்த தமிழர் ஒருவரே கிண்டல் செய்தார். பேருந்தில் "எழும்பூர்', "திருவல்லிக்கேணி', "மருத்துவக்கல்லூரி' என்று கேட்டால் நடத்துநர் விழிப்பார்; இவ்வளவுக்கும் பேருந்தின் முன் பலகையில் தமிழில் எழுதியிருக்கும்; "எக்மோர்', "டிரிப்லிகேன்', "மெடிக்கல் காலேஜ்'  என்றால்தான் உடனே புரியும். ஆக, தமிழில் பேசுவது இழிவு, அவமானம் என்று நினைக்
கும் தாழ்வு மனப்பான்மை உள்ளவன் தமிழனே!

தஞ்சாவூரை இன்றும் ஆங்கிலத்தில் "டேஞ்சூர்' என்று எழுதுபவர்கள் உள்ளனர். சென்னை இன்னும் பலபேருக்கு "மெட்ராஸ்' என்றால்தான் புரிகிறது. "மெட்ராஸ் யூனிவர்சிட்டி' (சென்னைப் பல்கலைக்கழகம்), "மெட்ராஸ் ஐகோர்ட்' (சென்னை உயர்நீதி மன்றம்) என்றால்தான் சிலருக்கு இனிக்கிறது! சென்னை உயர்நீதி மன்றம் மட்டுமில்லை மதுரைக் கிளையும் இந்தி(ய) தில்லிக்கு அடிமையாம்; எனவே இந்தியில் இன்னும் முழுமையாக வடநாட்டு நீதிமன்றங்களே மாற முடியாததால் ஆங்கிலத்தில்தான் பெயர்ப்பலகை வைத்திருக்கிறார்கள். அண்டை மாநிலங்களில்கூட அவரவர் தாய்மொழியில் எழுதியுள்ளார்கள் என்பது தெரியாத கண்ணிருந்தும் குருடர்கள் தமிழர்கள்தானே!

சுருக்கு இறுக்கு!


திரைப்படத்திற்குத் தமிழில் பெயர்வைத்தால் வரிவிலக்கு என்றதால் ஓரளவுக்குத் தமிழில் பெயர்வைத்தார்கள்; ஆனால் ஆங்கிலத்தில் துணைத் தலைப்பு, விளம்பரங்கள், விளக்கங்கள் எல்லாம்! படங்களின் தமிழ்ப்பெயர்களைச் சுருக்கி "எம்கேடி', "ஒபிபி', "ஓகே ஓகே' என ஆங்கில எழுத்துகளில்! அட! தமிழனே உன் தமிழை ஒலிக்க உனக்கு நேரமில்லையா? தமிழ் செறிவான மொழி என்பதே உனக்குத் தெரியாதா? குழந்தையைத் தொட்டிலில் இடுவதற்கு மாறாய்க் குப்பைத்தொட்டியில் திணிக்கலாமா? அம்மா அப்பாவை "மம்மி', "டேடி' என்று கூறி, மேலும் சுருக்கி, "மம்', "டே' 

எனச் சுருக்கும் தமிழனே! தாயைக் கூடத் தாய்மொழியில் அழைக்க முடியாத குறையுடைய மொழியா உன்மொழி?

தனித்தமிழ்த் தந்தை மறைமலை அடிகள் பெயரில் அமைந்த "மறைமலை அடிகள் நகர்' என்பதை "எம்எம்ஏ' நகர் என்று சுருக்கியவன் தமிழனே! சுந்தரபாண்டியன் பட்டினம் "எஸ்பி பட்டினம்' ஆகியது. கே.கே.நகர், ஜே.ஜே.நகர், என்.எஸ்.கே நகர், எம்.கே.பி நகர் என்றெல்லாம் சுருக்கிப் பயன்படுத்துவதால் தமிழ்ப்பெயர்கள் மறைந்து வருகின்றன. மறைமலைநகர் தொடர்வண்டி நிலையத்தின் பெயரை மறைமலை காமராஜர் நகர் என்று வைத்தவர்கள் வடநாட்டார் இல்லை; தமிழ்நாட்டுப் பேராய (காங்கிரசு)க் கட்சியினரே! "கஸ்தூரிபா நகர்' என சமஸ்கிருதப் பெயரைச் சரியாக எழுதவேண்டும் என்று கூறும் இவர்கள் எழும்பூரை "எக்மோர்' என்றும் சென்னை என்பதை "மெட்ராஸ்' என்றும் ஆங்கிலத்தில் வற்புறுத்தி எழுத வைக்கிறார்கள். 
பெயர்கள் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இதழ்களிலும் தலைப்புகள் பாதி ஆங்கிலம் பாதி தமிழ் அல்லது முழுவதும் ஆங்கிலச் சொல் என்றே உள்ளன. பாரதியார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலத் தலைப்பு இட்டு எழுதுவது தவறு என்று எழுதினார். இன்றும் திருந்தாதது யார் குற்றம்? "ஞானசாகரம்' என்ற தம் இதழின் பெயரை "அறிவுக் கடல்' என மாற்றினார் மறைமலை அடிகள். ஆனால் இன்றோ ஜுனியர் விகடன், அடையாறு டைம்ஸ், நாவல் டைம், இந்தியா டுடே என்று ஆங்கிலச் சொற்களால் ஆகிய பெயர்களைக் கொண்ட தமிழ் இதழ்கள் வருகின்றன. வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பெயர்களும் தலைப்புகளும் இவ்வாறே ஆங்கில மயமாக உள்ளன. மேலும் ஆங்கில எழுத்துக்களையும் கலந்து எழுதுகின்றனர்.

ஆங்கிலம் அல்லது சமஸ்கிருதத்திலேயே நகர்ப்பெயர்கள், தெருப் பெயர்கள் அடுக்ககங்களின் பெயர்கள், வீட்டுப் பெயர்கள், கடைப்பெயர்கள் வைக்கப் பெறுகின்றன. ஆங்கில எழுத்துகளிலேயே இந்தப் பெயர்கள் பெயர்ப்பலகைகளில் எழுதப் படுகின்றன. தமிழக அரசின் வீட்டுவசதி வாரியமும் வடநாட்டு அல்லது வெளிநாட்டு வீடுகட்டும் நிறுவனங்களும் தமிழைப் பற்றியோ தமிழ்ப்பெயர்களைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. ஆங்கிலம் அல்லது பிறமொழியில் அமைந்த பெயர்கள் உள்ள வீடுகளை, கடைகளை, வணிக வளாகங்களை, மருத்துவமனைகளை, பள்ளிகளைத் தேடி ஓடும் தமிழினின்   அயல்மொழி நாட்டத்தை என்ன சொல்வது? தம் வீட்டுக்குழந்தைகளின் பெயர்களைக்கூட- சமஸ்கிருதத்தில் வைப்பதைக்கூட புரியாததாகவும் சுருக்கியும் வைத்துக்கொள்ளும் புதுமை நாட்டம் (மோகம்) பெருகியுள்ளது. விவேகானந்தன் என்ற சமஸ்கிருதப் பெயரைக்கூட "விவேகானந்த்' எனச் சுருக்கி மேலும் "விவேக்' என வைத்துக் கொள்கின்றனர். வடநாட்டு நடிக நடிகையர் பெயர்களையும் கிரிக்கெட் வீரர் பெயர்களையும் சூட்டிக்கொள்ளும் இவர்கள் அவற்றையும் தமிழ் மரபுக்கு மீறிப் பொருந்தாத ஒலிகள் வரும்படிப் பெயர் வைத்துக் கொள்கிறார்கள்.

வானெலி


இந்தி(ய) அரசின் வானொலியும் தொலைக்காட்சியும் தமிழுக்கான நேரத்தைக் குறைக்கின்றன; நடுநடுவே இந்தி சமஸ்கிருதச் செய்திகளை ஒலி/ஒளிபரப்பி  மகிழ்கின்றன; கலையின் மூலம் ஏமாற்ற இந்தித் திரைப்பட பாடல்களைச் சிறிது சிறிதாக அதிகமாக்கி இந்தித் திணிப்பில் முன்னேறி வருகின்றன. அரசு வானொலி அதிகம் இந்தியைப் பரப்பவே வணிக (வர்த்தக) ஒலிபரப்பை வைத்திருக்கிறது. ஒருகாலத்தில் ஏறத்தாழ 1970களில் தாங்கள் இந்தி(ய) அரசின் அடிமைகள் என்பதை உணர்த்துவதற்காகத் தமிழ் நிகழ்ச்சிகளைச் சுவையற்றதாக்கி இந்தி, சமற்கிருத நிகழ்ச்சிகளை மொழிபெயர்த்தோ அப்படியேவோ தந்தன தமிழக வானொலி தொலைக்காட்சி நிலையங்கள்; எனவே தமிழகத் தமிழர்கள் இலங்கை வானொலியையும் தொலைக்காட்சி (ரூபவாகினி)யையும் பார்த்தார்கள்; இலங்கை வானொலியின் அழகு தமிழ் அறிவிப்பாளர்களையும் சுவையான நிகழ்ச்சிகளையும் பாராட்டினார்கள். தமிழக அறிவிப்பாளர்களும் குறிப்பாகத் தில்லியிலிருந்து வரும் செய்தியை வாசிப்பவர்களும் சமற்கிருதம் போலவும் ஆங்கிலம் போலவும் தமிழை ஒலித்துச் சிதைப்பதால் குறை கூறப்பட்டார்கள்; இந்திய(ய) அரசைப் பின்பற்றி இன்றைக்குச் சிங்கள அரசு தன் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் சிங்களத்தை தமிழுக்கு நடுவே படிப்படியே அதிகமாக்கித் திணித்து வருகிறது.

தமிழ்நாட்டில் இப்போது பெருகியுள்ள பண்பலை வரிசை என்னும் வானொலிகளில், பண்பற்ற சில செய்திகள் வருவதை நாம் காது குளிர கேட்கத்தான் செய்கிறோம்; மொழிக்கொலையையும் ஏற்கத்தான் செய்கிறோம். பாதி தமிழ் பாதி ஆங்கிலம் என்று கலப்படத் தமிழ் பேசுகின்றனர்; தமிழ்ச் சொற்களை ஆங்கிலம் போல் ஒலிப்பதாகக் கருதி மென்று துப்பி "லகர ளகர'க் கலவரம் புரியும் "லகர பாண்டி'களாகி, "இதுதான் ஊடகவியல் திறமை' என்கின்றனர். 

தமிழின் சிறப்பெழுத்தாகிய "ழ' என்பதை ஒலிக்க முடியாமல் "தமில் வால்க!' என்பவர்களைக்கூட மன்னிக்கலாம். வேண்டுமென்றே தமிழில் உள்ள மடிநா ஒலியாகிய "ள' என்பதை ஒழித்துக் கட்டுவதுபோல் "ல்' என்று நுனிநாக்குத் தமிழ் பேசுவதைப் பொறுத்துக் கொள்ள முடியுமா? அவர்கல், வந்தார்கல், சொன்னார்கல், பெயர்கல் என்று ஒலிக்கின்றனர்.

இது தொலைக்காட்சித் துறையையும் பாதித்துள்ளது. "வணக்கம்'! என்னும் இனிய தமிழ்ச் சொல்லைக்கூட சிதைத்து ஒலித்து மகிழ்ந்த ஒரு வாசிப்பாளர் உண்டு. நேர்காணலில் (பேட்டியின்போது) பிற மொழியாளரோ மேடைப் பழக்கம் இல்லாதவரோ ஆங்கிலம் கலந்து பேசுவதைக்கூட விட்டுவிடலாம்; நேர்காணல் புரியும் தொகுப்பாளரே ஆங்கிலத்தில் பேசுவதும் கலந்துபேசுவதும் கொடுமை. பேச்சுவழக்கில் உள்ள கொச்சைச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் எழுத்தில், திரைப்பாடலில் பதிவு ஆக்குவதும் பரப்புவதும் மொழிக்குச் செய்யும் பெரும் தீமை. 

அறிவியலையோ பிற வெளிநாட்டுப் புதுமைச் செய்திகளையோ தருவதிலா ஆங்கிலச் சொல் கலக்கின்றனர்? அன்றாடப் பேச்சுத் தமிழையே தமிங்கிலமாக மாற்றிப் பேசுகின்றனர். "பிரேக் பாஸ்ட், ஆயிடுச்சா?' "உங்க லவ்வர் கல்யாணம் ஆனவரா?', "என்ன சாங் வேணும்?' - என்கின்றனர். பாட்டன் தமிழில் பாட்டை இழந்து தமிழை வாழச் செய்வது தகுமா?

விளம்பரங்கள் செய்யும் பண்பாட்டுக்கேடு, பெண்ணிய எதிர்ப்பு, குழந்தை மனவியல் முறிப்பு, கூட்டுக் குடும்பச் சிதைப்பு - இவற்றுக்கு மேலாக அவை தமிழ் மொழிக்குக் கேடு செய்வது பெருகியுள்ளது. பொடுகு, சொரிசிரங்கு முதலிய தமிழ்ச்சொற்கள் இருக்கும்போது, பலருக்கும் தெரியாத "டேண்ட்ரஃப்', "சோரியாசிஸ்' என ஆங்கிலச் சொற்களைத் திணிக்கின்றனர். பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்த புதிய கலைச்சொற்களைத் தமிழில் பயன்படுத்துவதை எதிர்க்கின்றனர் சிலர்; ஆனால் அனைவருக்கும் தெரிந்த தமிழ்ச்சொற்களைப் புறந்தள்ளிக் கடினமான ஆங்கிலச் சொற்களைக் கொண்டுவந்து திணிப்பதற்கு ஆங்கில அடிமை மனப்பான்மைதானே காரணம். தண்ணீர், சோறு என்ற எளிய அன்றாட தமிழ்ச் சொற்களையும் ஜலம், சாதம் என சமஸ்கிருதமாக்கிய காலம், இன்று வாட்டர், ரைஸ் என மாறி அனைத்தையும் ஆங்கிலச் சொற்களாகத் திணிப்பதாகவும் கலப்படம் செய்வதாகவும் மாறியுள்ளது.

இந்தி(ய) இந்துஇந்திக்கும் சமஸ்கிருதத்துக்கும் ஊழியம் செய்வதும் தமிழைத் தாழ்த்துவதுமே இந்திய தேசியப் பற்று என்பது இந்தி(ய) தேசியமும் இந்துத்துவமும் பேசும் சமற்கிருதப் பற்றாளர்கள், ஆங்கில அடிவருடிகள் ஆகியோரின் கொள்கை. "சைக்கிளைப் பிரித்துப் போட்டால் தமிழில் சொல்ல முடியுமா? காப்பியைக் குளம்பி என்றால்தான் குடிப்பீர்களா?' என்று குசும்பு பேசினார் பேராயக் (காங்கிரசு) கட்சியின் அமைச்சர் ஒருவர். "தமிழ் அறிஞர்கள் குறுகிய மனப் பான்மை உடையவர்கள்' என்று தொலைக்காட்சித் தொகுப்பாளராகிய ஒரு பெண்மணி தாக்கிப் பேசினார். 

"ஆங்கிலம் போலப் பிறமொழிச் சொற்களைக் கடன் வாங்கினால்தான் தமிழ் முன்னேறும்' என்று சில அரசியல்வாதிகளும் எழுத்தாளர்களும் பேசிவருகின்றனர். 

ஆங்கிலம் போலவோ, வட இந்திய மொழிகள் போலவோ வளமற்ற மொழி இல்லை தமிழ்! மொழி வளர்ச்சி பற்றிப் பேசுவவோர் மொழி அறிஞர்களையும் தமிழ்ச்சான்றோர்களையும் கேட்டுச் செயற்பட வேண்டுமே தவிர, அவர்களைக் கிண்டல் செய்வது தவறு. தமிழாசிரியர்களையும் நல்ல தமிழ் பேசுவோரையும் வேடிக்கையாக்கும் திரைப்படமும் இதற்கு ஒரு காரணம்.

கட்சியையும் மதத்தையும் தாண்டி அரசியல் வாதிகளும் மதத்தலைவர்களும் சிங்கள மொழியைப் போற்றுவதால்தான் அங்கே அவர்கள் ஒற்றுமையாக இருக்கமுடிகிறது. சாதி, மத, கட்சி வேறுபாடுகளுக்கு ஆளாகிய தமிழர்கள் வீழ்ந்தார்கள்; வீழ்கிறார்கள். கன்னடஅறிஞர்களையும் கன்னட இயக்கத்தவர்களையும் கருநாடகத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் கட்சிகளும் சாதியினரும் மதிக்கின்றனர்; பதவி ஏற்கும் முன் முதலமைச்சரிலிருந்து அனைவரும் தம் மொழியின் மிகப்பெரிய கவிஞரைச் சென்று, கண்டு, வணங்கி வருகின்றனர்.

தமிழகத்திலோ சாதி, மதம், கட்சி ஆகியவற்றால் பிளவுபட்டு காவிரி முதலிய பொதுச்சிக்கல்களிலும் ஒன்றுபடாமல் தமிழ்ப்பணி களையும் தடுக்கின்றார்கள்.

தமிழ்க் கொலைவெறி

தமிழனைக் கொல்லவேண்டும், தூக்கில்போடவேண்டும் எனச் சிங்களனுக்கோ பிறருக்கோ வெறி இருக்கிறதோ இல்லையோ, தமிழைக் கொல்லும் இழிவு தமிழனிடம் உள்ளது. மக்கள் இலக்கியமாக விளங்கும் திரைப்படப் பாடல்களில் ஒலியையும் சொற்களையும் கெடுத்துப் பிறமொழி கலந்து கேடு செய்கிறார்கள். மெட்டுக்குப் பாட்டெழுத ஆங்கில சமற்கிருதச் சொற்களை மிகுதியாகக் கலந்து எழுதுகின்றனர். மறு கலவை (ரீமிக்ஸ்) என்று பழைய நல்ல தமிழ்ப்பாடல்களிலும் நடுவில் ஆங்கிலவரி (பாப்) பாடல்வரிகளை இணைத்துப் பாடுகின்றனர்.

தமிழக அரசு அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களும் பல்கலைக் கழகங்களும் பள்ளிகளும், ஏன், மழலைப் பள்ளிகளும் ஆங்கிலத்தையே பயன்படுத்துகின்றன. இந்தியை எதிர்த்துப் போராடி உயிர்விட்ட தமிழ்நாட்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகளிலும் வானொலி தொலைக் காட்சிகளிலும் கொடிகட்டிப் பறக்கிறது. அண்டை மாநிலங்களில் அவரவர் மொழி எண்களைப் பயன்படுத்தும்போது, தமிழன் தன் எண்ணை - எண் முறையை- இழந்து நிற்கிறான். காசு, பணம், வழக்கு, அரசு, 

கடவுள், அறிவியல் தொடர்பானவை இந்தி(ய) அரசு தொடர்பானவை தமிழில் இருந்தால் செல்லுபடியாகாது என்ற தாழ்வு மனப்பான்மை தமிழனுக்கு இருக்கிறது. "ஹேப்பி பொங்கல்' "ஹேப்பி பர்த் டே' என்று தன் அடையாளத்தையே மாற்றி இழந்து வருகிறான். உலகம் முழுதும் பரந்த தமிழன், தமிழ்நாட்டிலும் தன் மொழியையும் அடையாளத்தையும் இழந்து வருவதைத் தடுக்கத் தாய்மொழியாம் தமிழை மீட்டெடுக்க வேண்டும்.

""பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் -என்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் -வாழ்வு
கெட்டு நடுத்தெருவொடு கிடந்து
கீழ்நிலை உற்றாலும்- மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ் மகளின் துயர்
துடைக்க மறப்பேனா.''


-காசி ஆனந்தன்

Sunday, July 7, 2013

ஆடம்பரத் திருமணங்களும் விழாக்களும்

ஆடம்பரத் திருமணங்களும் விழாக்களும்    
-       தஞ்சை இறையரசன்
அன்றாடம் செய்யும் இயல்பான வாழ்க்கை நடைமுறைகளையும் கடமைகளையும் செய்து செய்து அலுத்துப் போகிற மனிதனுக்கு விழாக்கள் மகிழ்ச்சியைத் தருகின்றன.  குடிபுகுவிழா, திருமணம் முதலிய குடும்பவிழாக்களும் பொங்கல், திபாவளி, முதலிய வீடுசார்ந்த   பொது விழாக்களும் கோயில் திருவிழா,தீமிதிவிழா முதலிய ஊர்த் திருவிழாக்களும் பள்ளி கல்லூரி, விடுதி, நிறுவன ஆண்டுவிழாக்களும் பேருந்து/தொடர்வண்டி நாள் விழாக்களும்  குடியரசுவிழா,சுதந்திர தின விழா முதலிய நாட்டு விழாக்களும் சங்கம், கட்டு, நிறுவனம்,கல்வி நிலையம், தொழிலகம் அரசு ஆகியன நடத்தும் விழாக்களும் மிக அதிகச்செலவில் ஆடம்பரமாக இன்று நடத்தப்படுவது பெருகிவருகிறது.  இவை மகிழ்ச்சி தருவது உண்மைதான் என்றாலும் பல சிக்கல்களும் தருகின்றன.  இன்பத்துக்கு உரியவற்றையும் துன்பமாக்கிக் கொள்ளும் மனிதர்களை என்ன சொல்வது ?
ஆடம்பர அலை:
 குடும்பவிழாக்களில் காது குத்து, பூணூல்கலியாணம், பூப்புநீராட்டுவிழா, மணஉறுதி (நிச்சயதார்த்தம்), திருமணம் முதலியவற்றைத் தத்தம் பொருள் வசதிக்கேற்ப எளிமையாகக் குறைந்த செலவில் செய்வதுதான் வழக்கமாக இருந்தது.  ஆனால் இப்போது குடும்ப விழாக்களே மாநாடுகள் போல் நடத்தப்படும் நிலை வளர்ந்து வருகிறது.  வருகிறவர்களுக்கு சாப்பாடு 100 உரூபாய் என்றால் அழைப்பிதழ் 200 உரூபாய், பதாகை (பேனர்) விளம்பரம் 10,000 உரூபாய்; ஊரெல்லாம் தூங்கமுடியாதவாறு ஒலிபெருக்கியை அலறவிடுவதும் இரவெல்லாம் காணொளியில் (‘வீடியோ’-வில்) திரைப்படங்களைக் காண்பதும் பெருகி உள்ளன.  உணவில், நகையில்,சிக்கனம் பிடித்தாவது மாமனார் கடனில் கறந்தாவது திருமண நிகழ்ச்சியைப் படம் (‘வீடியோ’) எடுக்க வேண்டும் என நடுத்தரக்குடும்பங்களும் அலைமோதுகின்றன.
குழந்தைகளுக்கும் ஆடம்பரம்:
     குழந்தைகளின் பிறந்த நாளில் பலூன்கட்டி ‘கேக்’ வெட்டி ‘ஹேப்பி பர்த் டே டு யூ’ பாடி ஆங்கிலேயராகும் மகிழ்ச்சி பல வீடுகளில் பரவியிருக்கிறது.  குழந்தைகள் பள்ளியிலும் தம் பிறந்த நாளைக் கொண்டாடித் தம் பணக்காரத் தன்மையை வெளிப்படுத்த மற்ற குழந்தைகள் ஏங்குகின்றன.  பிறந்தநாளுக்கு மிக அதிக விலையில் உடையணிந்து விலை உயர்ந்த மிட்டாய் அல்லது இனிப்பு வழங்கும் குழந்தைகளால் போட்டி, பொறாமை, ஆடம்பரம் முதலியற்றை அடுத்த குழந்தைகள் மனத்திலும் வேறுபாட்டை ஆசிரியர்கள் மனத்திலும் ஏற்படுத்துகின்றன.  இப்போது பெரியவர்களும் ம் பிறந்த நாளைக் கொண்டாடுதல், திருமண நாளைக் கொண்டாடுதல் என வளர்ந்துள்ளது. சுவரொட்டிகள்வைத்தும் கஞ்சி காய்ச்சி ஊற்றியும் கட்அவுட்வைத்துஅதன்மேல் பாலை ஊற்றியும் சாராயத்தை ஊற்றியும்    தலைவர்களின் பிறந்த நாளையும் நடிகர்களின் பிறந்த நாளையும் ஆடம்பரமாகக் கொண்டாடுகின்றனர்.
லையா? வலையா?
     மணப் பெண்ணையும் மணமகளையும் உறுதி செய்து ஓலை எழுதுதல்(நிச்சயதார்த்தம்) மிகச்சிறிய அளவிலிருத்து பெரிய திருவிழா அளவுக்குச் செய்யப்படுகிறது. இன்னார்க்கு இன்னார் என்று முடிவு செய்வதை மிக நெருங்கிவர்கள் சிலர் இருந்து முடிவு செய்து ஓலை எழுதினால் போதாதா? பெரியோர்கள் முடிவுசெய்தபின் சடங்காக  இது தேவையில்லை என்பதால் நிச்சயதார்த்தம் இன்றியே நேரடியாகத் திருமணம் செய்வோர் உண்டு. நிச்சயதார்த்தத்தைத் திருமணத்தின் முதல்நாளில் பெயருக்குச் சடங்காகச் செய்வோரும் உண்டு; 10 கல்யாணத்துக்கு நிகராகச் செய்வோரும் உண்டு.

மணமா? மாநாடா?
     திருமண அழைப்பிதழில் மணமகன் மணமகள் பெயர்கள் எவை என்று தெரியாதபடி மாமன்,மச்சான், மச்சானின் மச்சான் என உறவினரின் பெயர்கள் – குறிப்பாகப் பெரிய பெரிய பதவிகளில் உள்ளவர்கள் பணக்காரர்கள் அரசியல்வாதிகள் பெயர்கள் – பெரும் பட்டியலாக இடம் பெறும்.  திருமணத்தின் போது வாழ்த்துரையாளர்கள்  ‘வாழ் வாழ்’ என்று கத்த குழந்தைகள் ‘வாள் வாள்’ என்று கத்த உறவினர்கள் தமக்குள் குசலம் பேச, பிறர் அரசியல், திரைப்படம் பற்றிப் பேச ஏன் இப்படிக் கூச்சல்குழப்பம்? ஒருபக்கம் அய்யரோ, அரசியல் வாதியோ அலறிக்கொண்டிருக்க மறுபுறம் சோற்றுக்கடை சந்தடி வேறு.
 பணம் நிறைய இருக்கிறது, நிறைய அறிமுகம் இருக்கிறது என்பவர்கள் பெரும் மாநாடு போல் ஊரையே கூட்டித் திருமணம் செய்கின்றனர்; எனினும் இது தவறான எடுத்துக் காட்டாகிக் கொள்ளையடித்துச் சேர்த்த பணத்தில் எலும்புத்துண்டு போடுவது போல் மக்களைக் கூட்டவும் வழிவகுக்கிறது.   இத்தகைய புதுப் பணக்காரர்களின் சமுதாய மதிப்புக்காகவும் அவர்கள் முகம் தாம் பெற்ற அல்லது பெற நினைக்கும் ஆதாயத்துக்காகவும் ஆட்டுமந்தை போல் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அந்தப் பணக்காரர்களுடைய பணத் தகுதியைக் கருதித் தம் தகுதிக்கு மீறிப் பலர் மொய் (அன்பளிப்பு) செய்கின்றார்கள்.
அலுவலக விழாவா ?
     திருமணங்கருக்கும் குடும்பவிழாக்களுக்கும் செல்ல வேண்டும் என்று அலுவலகங்களிலும் கல்வி நிலையங்களிலும் தொழிற்சாலைகளிலும் ஒரே நாளில் பலர்  விடுப்பு அல்லது அனுமதி கோருவதால் எவ்வளவு பணிகள் முடங்குகின்றன? நன்கு அறிமுகமானவர்களும் நெருங்கிப்பழகியவர்களும் மட்டும் போனால் போதாதா ? நூற்றுக் கணக்காகப் பலர் பணியாற்றும் நிறுவனத்தில் அறிமுகம்கூடக் குறைவாக இருக்கும். முகம் தெரியாத அல்லது பழகாத ஒருவரின் திருமணத்திற்கு எல்லோரும் போக வேண்டுமா? உடன் பணியாற்றுபவர் அல்லது கட்சித்தலைவர் குடும்பநிகழ்ச்சிகளுக்கு மட்டும் அல்லாமல் அவரது நெருங்கிய உறவினர் இல்ல நிகழ்ச்சிகளுக்கும் மொய் திரட்டுவது, அன்பளிப்பு வாங்குவது, பேருந்தில்/லாரியில்/ டிரெய்லர் வண்டிகளில்  செல்வது பெருகிவருகிறது.
கண்டவனும் கொடுத்தவனும்
     முகூர்த்த நாள் குறிப்பிட்ட ஒரே மாதத்தில் ஒரே நாளில் பலர் விடுப்பு எடுப்பது, பலர் செல்வது எவ்வளவு பாதிக்கும்? ஒரே நாளில் பல திருமணங்கள், பல ஊர்களில் என்றால் எப்படிச் செல்வது? இதனால் போக்குவரத்து நெரிசல், திடீர்ச்செலவு, உடல் நலிவு, பணிப்பாதிப்பு, குழந்தைகளின் கல்விப்பாதிப்பு, குடும்பக் கடமைகளில் சிக்கல் எல்லாம் ஏற்படுகின்.  “கண்ட பயலும் அழைப்பிதழ் கொடுக்கிறான்” என்று திட்டிக் கொண்டே செல்கின்றனர், கண்டவர்களையும் முன்பு தான் அழைத்துத் தன்  வீட்டுக்கு வந்தவர்கள் என்பதால் ! இருநூறு ரூபாய் செலவு செய்து கொண்டுபோய் இருபது ரூபாய் ‘மொய்’ எழுதிவருவர்.  வாழ்த்து மடலுடன் ரூபாய் அனுப்பியிருந்தால் அலைச்சலும் பிறவும் மிச்சம்.  அவர்களுக்கும் கடன் வாங்கிச் செலவு செய்து விட்டு மொய்ப் பணம் வந்ததில் கடனுக்கு  வட்டி அளித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
அழைப்பு கொடுத்து சண்டை வாங்கி
      என்னைக் கூப்பிடவில்லை,என்னை முதலில் கவனிக்கவில்லை, எனக்கு மரியாதை தரவில்லை என்றெல்லாம் சிறு சண்டைகளில் தொடங்கி சாராயம் அடிதடி அரிவாள் வரைக்கும் வளரும். மகிழ்ச்சிக்கு மாறாகக் கூச்சலும் குழப்பமும் சண்டையும் பகையும் ஏன்? அழைப்பிதழ் அச்சடித்தல்,கொடுத்தல், அலைச்சல, பணம் புரட்டல்,  செலவு, மளிவு, காய்கனி வாங்குதல், மண்டபச் செலவு, வரவேற்றல், தொழிலாளிகளைக் கெச்ஞிக் கூத்தாடி அழைத்து வருதல், வேலை வாங்குதல், ஏமாறுதல், திருட்டு, இவை எல்லாவற்றுக்கும் உள்ளாகிக் கடைசியாக இவைதான் பயனா? மகிழ்ச்சிக்கு மாறாகக் கூச்சலும் குழப்பமும் சண்டையும் பகையும் ஏன்? அகலக்கால் வைப்பதும் ஆடம்பரமும்தானே காரணம்.
பணம் சாப்பிட்ட செலவு
     விழாக்கால உணவு மிக அதிகமான பேருக்குச் செய்யப்படுவதால் தூய்மைக்குறைவும், சுமையின்மை, சூடு இன்மை, ‘டால்டா’ முதலிய ஒவ்வாத பண்டங்களின் சேர்க்கை, வேகாத நிலை முதலியன கொண்டுள்ளது.  உடல் நலம் உள்ளவர்களையும் வயிற்றுக் கோளாறு, பலநாள் நோய் உள்ளவர்களையும்  ஒவ்வாதவற்றை  உண்ணச் செய்கிறது.  வீட்டில் நல்ல உணவு இருக்கப் பொது இடத்தில் காத்திருக்க, இருபடி, மரியாதை இழக்க காரனமாகிறது. ஆயிரம் பேருக்கு உணவு இருந்தும்  நூறு பேர் முண்டியடித்து நுழைகிற இழிவு.
 பட்டினியாய்ப் பிச்சைக்காரர்களும் ஏழைகளும் மண்டபத்துக்கு வெளியே பந்தலுக்கு அப்பால் குப்பைக் கூங்களுக்கு அருகில் மிச்சம் மீதிக்குக் காத்திருக்க, உள்ளே வசதியானவர்களும் வயிறு புடைத்தவர்களும் புளிச்சேப்பக்காரகளும் பசிமாத்திரைக்காரர்களும் கூடிப் பலவகைத் தின் பண்டங்கள், காய்கனிகள், உணவுமுறைகள், சுவை நீர் வகைகள் ஆகியவற்றைக் கண்டு களிக்கவும் உண்டு கழிக்கவும் விருந்து.  எச்சிலாக்கி வீணாக்குவது பாதி; ஆடம்பரமாகக் காட்டிக் கொள்ள மிச்சம் வைப்பது மீதி எனப் பெரும் உணவுக்குவியல் வீணாக்கப்படும்.  எல்லாவகை ஆடம்பரங்களிலும் பணத்தைக் கொட்டிவிட்டு சமையலறையில் சிக்கனம் பிடிப்பவர்களின் விழாக் கூடங்களில் இரண்டாவது பந்தியிலேயே காய்கறி, பாயசம் இல்லையென்றாகி வரவர ரசம் தண்ணீர் ரசமாகி கடைசிபந்தி தண்ணீர் மட்டுமே என்றாவதும் உண்டு.
துணிவான செலவு
     பொங்கல், திபாவளி அல்லது கிறித்துமஸ் அல்லது ரம்சான் முதலிய விழாக்காலங்களில் எடுக்கப்படும் உடை (துணிமணி) வெடி (வானம்) போதாதென்று பிறந்தநாள், திருமணம், காதுகுத்து முதலிய குடும்பவிழாக்களிலும் துணிமணி வாணவேடிக்கை என்று துணிவான செலவு செய்கின்றனர்.  மாமன் மச்சான் வீட்டு விழாக்களில் மொய் எழுதி அல்லது அன்பளிப்பு செய்தும் அவர்கள் திரும்பச் செய்யும் ‘மரியாதை’ துணிமணி (உடை) வரும்.
     ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ (புறநானூறு) என்பதை மறந்து, பீரோ நிறைய உடைகளை அடுக்கி வைப்பது பெருகிவடுறது. ஆயிரக் கணக்கில் பணத்தை அள்ளிக்கொட்டி உடையில் – பட்டுப்புடவைகளில் - முடக்குவதில் என்ன பயன்? சிறுகுழந்தைகளுக்கு எடுக்கப்படும் எண்ணற்ற வகைவகையான உடைகள் அவர்கள் மிக விரைவாக வளர்வதால் – வளரவளரப் - பயனற்றுப் போகின்றன.  திபாவளி அன்று குழந்தைகள் ஏதோ சிறிது மத்தாப்பு, வெடி கொளுத்தினார்கள் என்று இல்லாமல், எப்போதும் எதற்கெடுத்தாலும் வெடியும் வாண வேடிக்கையும் விட்டுக் காசைக் கரியாக்குதல் தவறு.  
ஒட்டாத சுவரொட்டிகள்
                மிகப்பெரிய நிறுவனங்களும் அரசியல் கட்சிகளும் திரைப்பட அரங்குகளும் செய்யும் சுவரொட்டி விளம்பரம் இன்று குடும்பத்திலும் நுழைந்துவிட்டது.  குடும்பவிழாக்களுக்கு வாழ்த்து தெரிவித்துச் சுவரொட்டி ஒட்டும் பழக்கம் மிக மிகுதியாகப் பரவி விட்டது.  இவ்விழாவுக்கு வருகை தரும் அரசியல் தலைவர்களை வரவேற்றும் சுவரொட்டிகள் பெருகுகின்றன.  ஆயிரம் ரூபாயில் முடிக்கும் கிராமத்துத் திருமணங்களில் கூட ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து சுவரொட்டி அச்சடித்துக் கிராமங்களிலும் பக்கத்து நகரத்திலும் ஒட்டி மகிழுகின்றனர்.  சுவரொட்டிக்கு செலவு செய்து விட்டு விருந்துக்குச் செலவு செய்வதில்லை; விருந்தை  கவனிப்பதில்லை; விருந்தினரைக் கவனிப்பதில்லை, சுவரொட்டிச் செலவை வரதட்சணைக் கணக்கில் வைப்பவர்கள் உண்டு; நண்பர்கள் அல்லது கீழே வேலை செய்பவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு இந்த வாழ்த்துச் சுவரொட்டிகள் வருவதுண்டு.
விழாவா? விழவா!
     குடும்பவிழாக்களிலும் அரசியல் விழாக்களிலும் மிகுதியான மக்களை அழைப்பதால் குறிப்பிட்ட ஒரே நாளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுதிறது.  டிராக்டர், லாரி ஆகியவற்றிலும் பேருந்தின் மேலும் தொடர்வண்டிப் பெட்டியின் மேலும் பலர் பயணம் செய்கின்றனர்.  இதனால் விபத்துகள் நேருகின்றன.  விழா மகிழ்ச்சியில் சாராயம் குடித்துவிட்டு வண்டி ஒட்டுவதாலும் ஆடுவதாலும் விபத்துகள் சண்டைகள் ஏற்படுகின்றன. ஆயிரக்கணக்கானோரை ஒரிடத்தில் திரட்டுவதைவிட இருமனங்களை ஒன்றாக இணைப்பதே உயர்ந்தது.
வலம் போனாலென்ன?
     மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் கட்சி ஊர்வலம் போல் சாலையை அடைத்துக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக நடைபெறுகிறது.  பெண்கள் நகைக் கடையையே கழுத்தில் அணிந்து வருவதும், சீர் எடுத்து வருவது என்று வரதட்சணைப் பொருள்களின் கண்காட்சி ஊர்வலம் தடத்துவதும் நாட்டில் திருட்டையும் வரதட்சணைத் தீமையையும் பரப்புவன அல்லவா? மாப்பிள்ளைய ஒரு காரில் அழைத்து வந்தது போக 100 கார் ஊர்வலம் வருகிறது.  பணம், பெட்ரோல், நேரம், போக்குவரத்து ஆகியவை இதனால் வீணாகின்றன.  அரசியல் கட்சிகளின் ஊர்வலம் என்றால் அடுத்த கட்சிக்காரர்களின் கடைகளை உடைக்கப் பயன்படுகின்றது.  மதவிழாக்களில் ஏன் ஊர்வலங்கள்? சாமி புறப்பாடு, தேர், தெப்பம், தொழுகை, வேண்டல் என்று உண்டு.  இப்போது மிலாடி நபிக்கு ஊர்வலம், பிள்ளையார் சதுர்த்திக்கு ஊர்வலம், ரத ஊர்வலம், யாசம் செய்ய ஊர்வலம், கோயில் கட்ட ஊர்வலம் என்று புறப்பட்டு வன்முறையை மதப் பகையை இனக்கலவரத்தை ஏற்படுத்துகின்றன.
கடமையா? கடனா?
     ‘கடனோட கடனா நெய்யூற்றிப் பணியாரம் இடுவது’ என்பது பழமொழி. ‘என்கடன் கடன்வாங்கிப் பிணிப்பதே’ என்று தன்னையே கடளில் பிணித்துக் கொள்வோர் உள்ளனர்.  திபாவளிக்குக் கடன் வாங்கித் துணியிலும் வெடியிலும் செலவழிக்க அரசாங்கமும் கோ -ஆப்டைக்சும் துணிக்கடைகளும் தொலைக் காட்சியும்  தூண்டுகின்றன, திருமணத்திற்குப் பணம் சேருங்கள் என்று வங்கினார் விளம்பரம் செய்கின்றன; வாழ்நாளில் சேமித்ததை ஒரே நாளில் செலவு செய்யவா? ஆடம்பரச் செலவு செய்யும் தொகைக்கு ஏதேனும் நகைகள் வாங்கினால் வாழ்க்கையில் பொருளாதார இடர் இல்லாமல், இடர் நேர்கிற காலங்களில் யாரிடமும் கடனுக்குக் கையேந்தாமல் நகையை அடகுவைத்தோ விற்றோ சரிசெய்து கொண்டு - வாழ முடியும்.  ஏராளமாக்க் கடன் வாங்கிச் செலவு செய்த மணப்பெண்ணின் பெற்றோர் அடுத்த பெண்ணைக் கட்டிக் கொடுக்க வழி இல்லாமல், பட்ட கடனையும் அடைக்க முடியாமல் துன்பப்படுகின்றனர்.
 விழாவே கூடாதா?
                 திருமணம் போன்ற குடும்ப விழாக்களையும், திபாவளி போன்ற மதம் சார்ந்த குடும்ப விழாக்களையும், மதவிழாக்களையும், அரசியல் விழாக்களையும் எளிமையாகவும் சிக்கனமாகவும் சமுதாயத்திற்குப் பாதிப்பு இல்லாமலும் கொண்டாட வேண்டும்.  ஊர்வலம், வாணவேடிக்கை, சுவரொட்டி, வீடியோ, கட்அவுட் முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும் நம்மிடம் பணம் இல்லை என்றாலும் கடன் வாங்கியாவது செலவு வாரி இறைக்க வேண்டும் என்றோ, நம்மிடம் இருக்கிறது என்றோ - பெரும் ஆடம்பரச் செலவு செய்வது நம் பணத்தையும் மன அமைதியையும் கெடுப்பது மட்டுமல்லாது சமுதாய நலத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கெடுக்கும்.  மிகவும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் அழைக்கப்பட்டால் போதும்; மற்றவர்கள் தொலைவிலிருந்தோ இயன்றபோது வந்தோ வாழ்த்தினால் போதும் என்னும் மனநிலை வளர வேண்டும்.  சுட்டி என்னும்  சிற்றிதழ் திருமணம் செய்து கொண்டு திருமண  அறிவிப்பை மட்டும் அனுப்பு மணமக்களுக்கும் பாராட்டுத் தெரிவித்துத் தம் இதழை ஒராண்டு இலவசமாக அனுப்பியது.  நமக்குத் தேவை-                                               ஆடம்பரச் செலவுகளும் வறுமையான வாழ்க்கையும்
                                                            வெறுமையான சிந்தனைகளும் வீழ்ச்சியான  கொள்கைகளுமா?
உயர்ந்த சிந்தனைகளும் எளிமையான வாழ்க்கையும்
வளமையான நாடும் எழுச்சியான சமுதாயமுமா?

எது தேவை? வீட்டு வழாக்களும் ஊர் விழாக்களும் மதவிழாக்களும் நாட்டுவிழாக்களும் எளிமையான செலவில் உயர்ந்த சிந்தனையில் அமையட்டும்!                                 
*****************************************

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers